மாநிலம் முழுவதிலுமிருந்து 1,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தினர்.
மினி கிளினிக்குகள் கடந்த அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டன. கிராமப்புறங்களில் 1,400 கிளினிக்குகள் , சென்னை மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் தலா 200 கிளினிக்குகள் மற்றும் 200 இடங்களில் நகரும் மினி கிளினிக்குகள் என மொத்தம் 2,000 மினி கிளினிக் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தன.
பிப்ரவரி மாதம் 2021, கடந்த அதிமுக அரசால் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளில் 1,800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு முன்பே கொரோனா முதலாவது அலையில் அரசின் அழைப்பை ஏற்று பணிக்கு வந்தவர்கள் தான் இந்த மருத்துவர்கள். கொரோனா முதல் அலை முடிந்த நேரத்தில் மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்டனர்.
சில மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கிய போது பல மருத்துவர்கள் கொரோனா நோயாளிகள் அதிகம் இருந்த சென்னை மருத்துவமனைகளில் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின் டெங்கு பணி, வீடு வீடாக என்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, கொரோனா நோயாளிகளை வீட்டில் சென்று பராமரிப்பது, பள்ளிகளில் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம் போன்ற திட்டங்கள் செயல்படுவதால் அம்மா மினி கிளினிக்குகள் அவசியம் இல்லை என கூறி கடந்த டிசம்பர் மாதம் மினி கிளினிக்குகளை அரசு மூடிவிட்டது. கொரோனா மூன்றாவது அலையிலும் பணி செய்த இந்த மருத்துவர்களின் சேவை மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரண்டு ஆண்டுகள் களத்தில் அயராது உழைத்த தங்களை அரசின் வேறு திட்டங்களில் பணியமர்த்திக் கொள்ள வேண்டும் என மினி கிளினிக் மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை மாற்று பணிகளில் பயன்படுத்தப்படுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் இந்த மருத்துவர்களுக்கான பணிவாய்ப்பு நிறைவு பெற உள்ளதால் தமிழக சுகாதாரத்துறை சார்பில் மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட 1,800 ஒப்பந்த மருத்துவர்கள் இன்று பணி பாதுகாப்புக் கோரி வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் எண் 356ல் குறிப்பிடப்பட்டது போல, அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் மினி கிளினிக் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
Also read... அரசு விழாவில் கண் கலங்கிய தமிழிசை சௌந்தரராஜன்..
இந்நிலையில் மினி கிளினிக் பணியை நம்பி காதல் திருமணம் செய்து கொண்ட பெண், ஆறு மாத கர்ப்பிணியாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிந்த 1620 மருத்துவர்களின் பணிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த மருத்துவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
மதுரையை சேர்ந்த கர்ப்பிணி பெண் மருத்துவர் இந்த பணி இல்லை என்றால் தனது வாழ்வே கேள்விக்குறியாகிவிடும் என கூறுகிறார். இந்த பணியை நம்பியே தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது திடீரென வேலை என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறுகிறார்.
காதல் திருமணம் செய்து கொண்டதால் எனது பெற்றோர் ஆதரவு இல்லை. எனது குடும்பத்தை நடத்த இந்த வேலை மிக முக்கியம். இரண்டு மாதங்களாக சம்பளமும் தரப்படவில்லை. எனது கணவர் சொந்தமாக தொழில் தொடங்கியுள்ளார். சம்பளம் இல்லாததால் ஆறாவது மாத ஸ்கேன் கூட இன்னும் எடுக்கவில்லை. ஏன் மருத்துவர் ஆனோம் என தோன்றுகிறது. " என்று கூறினார் .