சென்னையிலிருந்து நேபாளத்துக்கு செம்மரக்கட்டைகளும் நேபாளத்திலிருந்து சென்னைக்கு ஹாசிஸ் எனும் கஞ்சா ஆயில் போதைப்பொருள் கடத்தப்பட்டது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தலைமை செயலக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் விடுதியில் ஹாசிஷ் எனப்படும் கஞ்சா எண்ணெய் கைமாறுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று தனியார் விடுதியில் பதுங்கி இருந்த இருவரை கைது செய்தனர்.
மேலும் விடுதியில் மறைத்து வைத்திருந்த 10 கிலோ ஹாசிஷ் எனப்படும் கஞ்சா எண்ணெய் மற்றும் 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போதைபொருள் கடத்தி வந்த நபர்கள் ரெட்ஹில்ஸ் பகுதியில் லாரி ஓட்டிவரும் தேவக்கோட்டையைச் சேர்ந்த விஜயகுமார்(37) மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த அழகுராஜா(34) என்பது தெரியவந்தது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் ரெட்ஹில்ஸ் பகுதிலிருந்து லாரி மூலமாக நேபாள நாட்டிற்கு சென்று, அங்கிருந்து லாரியில் டெல்லி வழியக கஞ்சா எண்ணெய் எனப்படும் ஹாசிஷ் போதை பொருளை மறைத்து வைத்து சென்னைக்கு கடத்தி வந்து விற்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஹாசிஷ் போதை பொருள் ஒரு கிராம் 1750 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நியூஸ் 18 செய்தி எதிரொலி : அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு கொடுத்தது தமிழக அரசு
சீன நாட்டில் கஞ்சாவிலிருந்து ஹாசிஷ் எனப்படும் கஞ்சா எண்ணெயை தயாரித்து அதை நேபாளம் போன்ற நாடுகளுக்கு கடத்தி வருவதாகவும், நேபாள நாட்டில் இருந்து, இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு லாரி மூலமாக ஹாசிஷ் போதை பொருள் கடத்தி செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நாகப்பட்டினத்தில் ஹாசிஷ் போதை பொருள் கடத்த முற்பட்டபோது பிடிப்பட்ட கும்பல் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கும்பலை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பல் பல கோடி மதிப்பிலான ஹாசிஷ் போதை பொருளை கடத்தி வந்து, காரைக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்துவிட்டு சென்னையில் விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிங்க: 15 ரூபாய்க்குள் வயிறாற ஒரு வேளை உணவு 2 ரூபாய்க்கு இட்லி, பூரி விற்பனை செய்யும் மூதாட்டி
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு 1.75 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலின் முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான விஜயகுமார் முதலில் கன்டெய்னர் லாரி ஓட்டுநராக இருந்ததாகவும், இவ்வாறு போதைப்பொருட்களை நேபாள நாட்டில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் சப்ளை செய்து அதன் அடிப்படையில் ஐந்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளை வாங்கி, கன்டெய்னர் லாரி ட்ரான்ஸ்போர்ட் அதிபராகும் அளவுக்கு சம்பாதித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி சென்று டெல்லி வழியாக நேபாள நாட்டிற்கு இந்த கும்பல் கடத்துவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த செம்மரக்கட்டைகள் சீன நாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் சென்னைக்கு வரும்போது கண்டுபிடிக்க முடியாத அளவில் கண்டெய்னர் லாரிகளில் ஹாசிஷ் எனப்படும் இந்த கஞ்சா எண்ணெய் போன்ற போதை பொருள் சென்னைக்கு கடத்திவருகின்றனர்.
சுமார் நான்கு வருடத்திற்கு மேல் இதுபோன்று செம்மரக் கட்டைகளை நேபாள நாட்டுக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து போதைப்பொருள் கடத்தி வரும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இமாச்சல பிரதேச பகுதிகளில் விளையும் கஞ்சாவின் விதையை கையால் நசுக்கி பசை போன்று ஆக்கி ஹாசிஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கின்றனர்.
இதை படிக்க: SBI வங்கியில் அடகு வைத்த நகையை நூதனமாக திருடிய நகை மதிப்பீட்டாளர்.. திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது .
இங்கு விற்பனை செய்தால் ஒன்றே முக்கால் கோடிக்கு விற்பனையாகும் போதைப்பொருள், இலங்கையில் 4 கோடி அளவிற்கு விற்பனையாகும் என்பதால் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பல் பின்புறத்தில் உள்ளவர்கள் குறித்து கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.