புழல் சிறை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இறந்ததற்கு காரணம் தெரிவிக்க கோரி மனைவி புகார் அளித்துள்ளார்.
சென்னை ஓட்டேரி கிறிஸ்தவ சாலையை சேர்ந்தவர் சீனிவாசன் என்ற அறுப்பு சீனிவாசன் (வயது 35). மதுரவாயல் காவல்துறையால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட சீனிவாசனை நேற்று மதியம் அவரது மனைவி ஜான்சிராணி நேரில் சென்று மனு போட்டு பார்த்துவிட்டு வந்ததுள்ளார்.
ஜான்சிராணி வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்தில் உனது கணவர் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புழல் சிறையில் இருந்து செல்போன் மூலம் தகவல் வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவரது கணவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கையில் திடீரென சீனிவாசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு புழல் மத்திய சிறையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சிறைக்காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
இது குறித்து புழல் சிறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதியம் சென்று பார்த்துவிட்டு வந்த கணவர் தற்போது உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் உயிரிழப்பிற்கான உரிய காரணத்தை மருத்துவர்களும் காவல்துறையினரும் தெரிவிக்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர்: அசோக் குமார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.