சென்னையில், திருட்டு பைக்கில் சென்று மொபைல் பறிப்பில் ஈடுபட்ட இருவர் விபத்தில் சிக்கி, தலை சிதைந்து உயிரிழந்தனர்.
தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்டாக பணியாற்றி வரும் கார்த்திக் என்பவர் நேற்று நண்பகல் பாரிமுனை ராஜாஜி சாலையில் இந்தியன் வங்கி அருகே நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கார்த்திக்கிடமிருந்து செல்போனை பறித்து விட்டு, விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.
ராஜாஜி சாலையிலிருந்து போர் நினைவு சின்னம் வலது புறம் திரும்பி கொடிமர சாலையில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது முத்துசாமி பாலத்திற்கு சில மீட்டர் தூரம் முன்பாக தவறான திசையில் சென்று சுற்று சுவரில் மோதி பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
விபத்தில் தலை சிதைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் பொதுமக்கள் தகவலின் பேரில் போலீசார் மீட்டு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். அளவுக்கதிகமான குடிபோதையில் இருந்த இருவரையும் மருத்துவர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்தனர்.
மேலும் படிக்க: சாலை விபத்தில் பலியான செயின் பறிப்பு கொள்ளையன்.. கூட்டாளி சொன்ன அதிர்ச்சித் தகவல்
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இரண்டு இளைஞர்களும் இன்று உயிரிழந்தனர். வழக்கு பதிவு செய்த கொத்தவால்சாவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த இருவரும் திருட்டு இருசக்கர வாகனத்தில் சென்று மொபைல் பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது. விபத்தில் இறந்த இரண்டு இளைஞர்களின் முகமும் முழுவதும் சிதைந்துள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் எழுந்துள்ளது. மேலும் இறந்த இளைஞர்களின் பெயர், அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.