செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் பத்தேசந்த். இவரது மனைவி பிரேமா பி இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இரண்டு பேர்
சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். மூன்றாவது மகன் மற்றும் நான்காவது மகன் திருக்கழுக்குன்றம் பகுதியில் தங்கி தந்தையுடன் அடகு கடையில் பணியாற்றி வருகின்றனர். மூன்றாவது மகன் பிண்டு குமார் (44). இவரது மனைவி சுஜாதா வயது 27. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மாமியார் பிரேமா பி, மருமகள் சுஜாதாவை ஒருமையில் பேசுவதாகவும், உணவைத் தட்டில் போட்டு தள்ளி விடுவதாகவும், மருமகளை தரக்குறைவாக பேசி வருவதாகவும் காவல் நிலையத்தில் விசாரணையில் சுஜாதா தெரிவித்துள்ளார். மேலும், பிரேமா பி ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் சுஜாதா பிகாரி என்பதால் இவர்களுக்குள் அடிக்கடி கருத்து மோதல்களும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மாமியார் பிரேமா சடலமாகக் கிடந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்த மகன் ரன்பாத்லால் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் மருமகள் சுஜாதா வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.அவரைத் தேடியபோது காலில் காயமடைந்து நொண்டியபடி மருத்தவமனைக்கு சென்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மை தெரியவந்தது. தொடர்ந்து துன்புறுத்தி வந்த மாமியாரை கொலை செய்யத் திட்டமிட்ட சுஜாதா, பீகாரிலிருந்து தனது உறவினர்களான சுமித், தீபன் ஆகியோரை வரவழைத்துள்ளார். இரவில் வீட்டில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மாடியில் படுக்க வைத்த சுஜாதா, உறவினர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.அவர்கள் வீட்டில் தனியாக இருந்த மாமியாரை கத்தியால் கழுத்தில் குத்தி படு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது
பீகாரில் இருந்து வந்த சுமீத் வயது 24, மற்றும் தீபன் வயது 25 ஆகியோர் மூலம் சுஜாதா மாமியாரை கொலை செய்துள்ளார். கொலை செய்த ஸ்மித் மற்றும் தீபன் ஆகியோர் வீட்டின் பின்பக்கமாக குதித்து மலையின் மீது ஏறி தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தப்பித்துச் செல்லும்போது சுஜாதா காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது, அவர் போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Must Read : திமுக ஊராட்சிமன்ற தலைவர் மகனால் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயற்சி
சுஜாதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாமல், மருமகள் கொலை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முடிவில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் - ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.