முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

Weather Update : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் இருநாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

இதனால், இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திடீர் என பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டாலும் சில இடங்களில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் தத்தளித்தன. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 5 வது நாளாக பிற்பகலுக்கு மேல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன், பாளையங்கோட்டை, என்.ஜி.ஒ காலனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் குளம் போல் தேங்கியும் நிற்கிறது. சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.

இதேபோல, மதுரை, புறநகர் பகுதிகளான வாடிப்பட்டி, நாகமலைப் புதுக்கோட்டை, அச்சம்பத்து, விராட்டிபத்து உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல கோரிப்பாளையம், முனிச்சாலை, தல்லாகுளம், அண்ணா நகர் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி ஊராட்சி கோட்டை மலை கிராமத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடந்த 1997ஆம் ஆண்டு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு ஒன்று இடிந்து விழுந்தததில் முனியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ராசக்காபாளையம், ஆனைமலை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. கோடை மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Also Read : இனி அரசியல் பயணம்: நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மாற்றம் உறுதி - சசிகலா சூளுரை

இதேபோல, கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், பெருமாள்மலை பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவியது. விருதுநகரில் ரயில்வே பீடர் ரோடு, மேலரத வீதி, பழைய பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கனமழையால், கந்தகபூமி குளிர்ந்தது. தேனி மாவட்டம் பெரியகுளம், போடி, சின்னமனூர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்று வீசியதால், பெரியகுளம் வடகரை கிராம நிர்வாக அலுவலகத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன.

Read More : மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து செம அறிவிப்பு

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மணிகள். மழையால் சேதமடையும் நிலை ஏற்படுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் சேதம் அடைந்துள்ளன. தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அகற்றி, மழை பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Must Read : அந்தமானில் ஆளுநர் பொறுப்பு வாங்க அண்ணாமலை துடிக்கிறார் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 14 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நெல் மூட்டைகளை மூடி பாதுகாக்க தார்ப்பாய்கள் கேட்டபோது அதிகாரிகள் தர மறுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Rain, Weather News in Tamil