அதிமுக பொதுக்குழு கூட்டம் 23ம் தேதி (நாளை) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கோரி,
எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். ஒற்றைத் தலைமை விவகாரத்தால், பொதுக்குழு கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 23ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்றும், அதை ஒத்திவைக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையான நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தாங்களும் கட்டாயம் அதில் பங்கேற்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல தணிகாச்சலம் என்பவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வருவதற்கு பட்டியலிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் முறையீடு செய்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், எந்த செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Must Read : சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் - பெரும்பாலான மக்கள் கருத்து
இதையடுத்து, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து அனைத்து வழக்குகளையும் இன்றும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.