டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 49 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: -
“இந்த ஜி.எஸ்.டி குழு கூட்டம் மதுரையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இடைத்தேர்தல் மற்றும் குடியரசுத் தலைவரின் பயணம் உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம் மதுரையில் நடைபெறும்.
ஜி.எஸ்.டி பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து மத்திய நிதி அமைச்சர் மற்றும் மத்திய நிதித்துறை செயலாளருக்கு வழங்க உள்ளேன். 2020 -21ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி ரூ. 4,230 கோடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
மேல் முறையீட்டு தீர்ப்பாயம் மாநில அளவில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு மாநிலங்களால் எழுப்பப்பட்டன. குறிப்பாக தீர்ப்பாய உறுப்பினர்களின் நியமனம் உள்ளிட்டவற்றில் மாநிலங்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. சுமார் 2 - 3 மணி நேர விவாதத்திற்கு பிறகு அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்துப்பூர்வ அறிக்கை விரைவில் வழங்கப்படும் என கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே குழுவின் அறிக்கை மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரே தேசம், ஒரே வரி என்பதை ஒருபோதும் செயல்படுத்த இயலாது. ஜி.எஸ்டி இழப்பை நீட்டிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சிலில் விவாதிக்காமல் நிதி அமைச்சகமும் பிரதமரும் முடிவு செய்வதை ஏற்க முடியாது. அது ஜனநாயக நடைமுறை அல்ல. கூட்டாட்சி தத்துவத்தின் படி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதில்லை. அப்படி நடைபெற்றால் ஜி.எஸ்.டி இழப்பீடு தொடர்பாகவும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க அனுமதித்திருப்பார்கள். அது தனியாக விவாதிக்கப்படும் என்று கூறக்கூடாது” என்று தெரிவித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Finance minister, GST council, Minister Palanivel Thiagarajan