ஆயுத பூஜைக்காக மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக 3 இடங்களில் இருந்து, அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகிற ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 12ஆம் தேதி, 13ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிற பின்வரும் வழித்தடப்பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது இயக்கப்பட்டது போல் கீழ்காணும் விவரப்படி 3 பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும். இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
1.தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்.
2.பூந்தமல்லி பேருந்து நிலையம்.
3.கோயம்பேடு பேருந்து நிலையம்
இதில் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் செல்லும் பேருந்துகளும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.
பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேல் குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பேருந்துகள்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் பேருந்துகள் புறப்படும்.
Must Read : சோழ மன்னர்கள், கிருபானந்த வாரியார் திருப்பணிகள் செய்த வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை
எனவே பொது மக்கள் 3 பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பேருந்து நிலையங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayudha poojai, Bus, Koyambedu