அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழி. கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகானந்தம் தனது மகளை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 8ம் வகுப்பில் சேர்த்து இருந்தார். தற்போது 12ம் வகுப்பில் படித்து வந்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் மாணவி தங்கியிருந்தார்.இந்நிலையில் கடந்த 9ம் தேதி மாணவி வாந்தி எடுத்துள்ளார்.
அப்போது அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முருகானந்தம் மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாணவி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் வந்து விசாரித்தனர்.
இந்தநிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய பா.ஜ.க துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், ‘நாளை காலைக்குள் கைது செய்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மதமாற்றம் செய்ய வலியுறுத்திய ராக்கிலின்மேரி என்பவரை கைது செய்ய வேண்டும். அந்த பள்ளியை மூட வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.