தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில், இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சாலையில் நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால், சென்னையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களுக்காக மழை, வெள்ளம் நிவாரணப் பணிகளில் நமது கட்சியினர் முனைப்போடு ஈடுபட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளன.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகமான அளவில், கடந்த 6 ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மக்கள் துயர் துடைக்கும் வகையிலே, நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுதல், உதவிப் பொருட்கள் வழங்குதல் போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
மிகப் பெரிய பிரச்சனைகள் இருப்பின், தொடர்புடைய அரசு அதிகாரிகளை அணுகி தேவையான உதவிகளை பெற்றுத் தர வேண்டுகிறேன். இப்பணிகளில் அவசர கதியில் ஈடுபட வேண்டாம்.
பொது மக்களும், ஆங்காங்கே மழை வெள்ளத்துடன், தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கி வருவதால் மிகக் கவனமாக வெளியில் சென்று பாதுகாப்புடன் வர வேண்டும். முடிந்த அளவு, வெளியில் செல்வதை தவிர்த்திட அன்புடன் வேண்டுகிறேன்.
எவ்வித புரளிக்கும் இடம் தராமல், மக்களை அச்சத்தில் இருக்க விடாமல், அதிகார பூர்வமான தகவல்களை மட்டுமே நம்பவும். கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.