மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளை மலைப்பட்டி கிராமத்தில் டேவிட், நவமணி தம்பதிக்கு நான்காவதாக பிறந்தவர் தா.பாண்டியன். 1932-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி பிறந்த இவர், சிறு வயது முதலே பொதுவுடமை சிந்தனையுடனும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அதிக ஆர்வத்துடனும் இருந்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படிக்கும் போது மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அதே கல்லூரியில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர், பொதுக் கூட்டங்களில் இந்திரா காந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரையில் பலரது பேச்சுகளை மேடையில் மொழிபெயர்த்திருக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ல் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அவருக்குப் பின்னால் இருந்த தா.பாண்டியன், தூக்கி வீசப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார்.
1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு சேவையாற்றினார்.
1962-ல் 'ஜனசக்தி'யில் எழுத ஆரம்பித்த தா.பாண்டியன், தற்போது வரை ராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள், சோக வரலாற்றின் வீர காவியம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 89 வயதான தா.பாண்டியன் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.