பிரபல நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோயிலை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நேற்று இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ள ஜாகிர் உசேன், தனது பெயர்தான் இதற்கு காரணம் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ''நான் என் தாய்வீடாக கருதும் , தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன். 'காரணம் என் பெயர்'
முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப் பட்டேன்.
இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது.
என்னை துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல. இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன்.
காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை'' என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 'நான் 8 வயது முதலே திருச்சி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றுள்ளேன். பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் முதன் முறையாக மதத்தின் அடிப்படையில் என்னை தடுத்து நிறுத்தியது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ரங்க ராஜன் என்பவர்தான் திட்டமிட்டு இதனை செய்துள்ளார். மற்ற நிர்வாகிகள் யாரும் என்னை தடுக்கவில்லை. மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். இதை சீர்குலைப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, மன உளைச்சல் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்ட ஜாகிர் உசேன், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து ஜாகீர் உசேனை வெளியேற்றவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Srirangam