அரசியல் காரணத்திற்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்தது கண்டிக்கத்தக்கது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவையில் நேரமில்லை நேரத்தில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் குறித்தும், ஈரோடு, திருப்பூர் கொலை கொள்ளை சம்பவம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் தனியாக வசித்த முதியவர்களை கொலை செய்து கொள்ளை அடித்துள்ளனர்.
இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தனியாக வசிக்கும் வயதானவர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் வாழும் முதியவர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
அடுத்ததாக, விக்னேஷ் காவல் துறை விசாரணையில் மரணம் அடைந்துள்ளார். இது தொடர்பாக முன்பே அதிமுக பேரவையில் பேசியது, அதற்கு முதலமைச்சரும் விளக்கம் கொடுத்தார். ஆனால் முதலமைச்சர் பேரவையில் கொடுத்த விளக்கமும், விக்னேஷ் உடற்கூறாய்வு முடிவும் மாறுப்பட்டு உள்ளது. இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், சிபிஐ விசாரனைக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் போது, தற்போது கிடைத்துள்ள உடற்கூறு ஆய்வு முடிவுகளின்படி 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஆனால் இதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி, விக்னேஷ் மரணம் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார். மேலும் விக்னேஷ் மரணம் சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் நேர்மையாக இருக்காது சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
பின்னர் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விக்னேஷ் உடம்பில் 13 இடங்களில் ரத்தம் காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் விக்னேஷ் மரணத்தில் முதல்வர் சட்டமன்றத்தில் முன்னர் குறிப்பிட்ட செய்தியும், உடற்கூறாய்வு முடிவு கூறும் செய்தியும் முரண்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேர்மையாக நடக்க வேண்டுமென்றால் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் | தென்காசியில் முதியவர் அடித்துக் கொலை... பிரேதப் பரிசோதனையில் அரசு மருத்துவமனை அலட்சியம் - உறவினர்கள் குற்றச்சாட்டு
விசாரித்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மாநில காவலர்கள் விசாரித்தால் சரியாக இருக்காது. சி.பி.ஐ விசாரித்தால் தான் சரியாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அரசியல் காரணத்துக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்தது கண்டிக்கத்தக்கது. முதல்வர் பொதுவான ஒருவர். எல்லா மதத்திற்கும் சமமானவர் ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லதது ஏன் என அதிமுக கேட்டால் அவை குறிப்பில் இருந்து நீக்குகிறார்கள். முதல்வர் அனைவருக்கும் பொதுவான ஒருவராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் திமுகவின் ஓராண்டு கால ஆட்சி குறித்து பேசும்போது, தமிழகத்தில் மோசமான ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. ரவுடிகள் சர்வ சாதாரணமாக சுற்றுலா செல்வது போல் வலம் வருகிறார்கள். ஊழல் இல்லாத துறைகளே இல்லை, திமுக அரசு திறமையற்ற அரசாக உள்ளது. விளம்பரம் தான் திமுக அரசை தூக்கி பிடித்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒன்று, இரண்டு திட்டங்களை தான் திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் வெட்டு ஏற்படுகிறது அதிமுக ஆட்சி தடையில்லா மின்சாரத்தை கொடுத்தது என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi Palanisami