தமிழ்நாட்டில் தற்போது சராசரியாக 3,000 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிந்துகொண்டு முதன்மையான சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது.
காய்ச்சல் என்பது நோய் அறிகுறி மட்டுமே. சரியான சிகிச்சை அளிப்பதற்கு எந்த காரணத்தினால் காய்ச்சல் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட வேண்டும். டெங்கு, மலேரியா, டைபாய்ட், எலிக் காய்ச்சல், ஸ்க்ரப் டைபஸ், ஆகியவை தான் தமிழ்நாட்டில் பொதுவான காய்ச்சல் நோய்கள் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் காய்ச்சல் வந்தால் கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சலும் நோய்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளில் 55% முதல் 60% வரையிலான காய்ச்சல்கள் மட்டுமே என்ன காய்ச்சல் என்று கண்டறியப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் பொதுச் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வு முடிவுகள் அடிப்படையில் இந்த தரவுகள் கிடைக்கப் பெற்றன.
இது குறித்துத் தொற்று நோய் நிபுணர் மருத்துவர் வி. ராமசுப்ரமணியனிடம் கேட்ட போது, பல நேரங்களில் காய்ச்சல், உடல் வலி, சளி, ஆகிய அறிகுறிகள் மட்டுமே ஏற்படும், இதைத் தவிர வேறு அறிகுறிகள் பெரிதாக இருக்காது, இவை Acute undifferentiated fever எனப்படும் என்றார். வெப்ப மண்டலமான இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் டெங்கு, மலேரியா, ஸ்க்ரப் டைபஸ்,( scrub typhus) எலி காய்ச்சல் ஆகிய நோய்களே இது போன்ற அறிகுறிகளுடன் ஏற்படும் என்றும் இவை அல்லாமல் சாதாரண சளி போன்ற நோய்கள் ( influenza like illness ) என வகைப்படுத்தப்படும் நோய்களுக்கும் காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்.
தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவை விட அதிகமாகக் காணப்படுவது பன்றிக் காய்ச்சல் ஆகும். இரண்டாவது இடத்தில் தான் கொரோனா உள்ளது. அதன் பின் டெங்கு அதிகமாகப் பரவி வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும் காய்ச்சல்களில் 40% காய்ச்சல் என்ன வகை காய்ச்சல் என்று தெரியாது, சரியான பரிசோதனைகள் செய்தால் 60% காய்ச்சல்கள் என்னவென்று கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறினார்.
இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவிக்கையில் காய்ச்சல் நோயாளிகளுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் அளவுகளைப் பரிசோதித்து உடனடியாக எந்த வகை காய்ச்சல் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்குத் தக்க சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
இதுதொடர்பாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள 2 ஆயிரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் காய்ச்சல் நோயாளிகளின் விவரங்கள் , கண்காணிப்பதற்கு வசதியாக, அரசின் IHIP தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். ஒரே இடத்தை சேர்ந்த பலருக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dengue fever, Fever, Tamil Nadu