உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பும், பயண ஏற்பாடுகளும் தொடர்பாக வெளியுறவு அமைச்சர், எம்.பி.க்களுக்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்திருப்பதாக
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின், இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, பயண ஏற்பாடுகள் பற்றி தமிழ்நாடு முழுவதும் இருந்து பெற்றோர்களின், உறவினர்களின் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து நானும் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அமைச்சக அதிகாரிகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறேன். பெற்றோருடன் அங்கிருந்து தொடர்பு கொள்கிறவர்களின் அலைபேசியில் சார்ஜ் தீர்ந்து விடுவதால், பயணத்தின் நடுவே சார்ஜ் போட முடியாமல் பேச முடியாமல் போகிறது. இது பதட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
தற்போது இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் அரசு தரப்பு ஏற்பாடுகள் பற்றி விவரித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவெகியா எல்லைகள் வழியாக வருபவர்களுக்கு தொடர்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளியுறவு அமைச்சகத்தின் கட்டணமில்லா தொலை பேசி, மற்ற தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன.
மேற்கூறிய நான்கு நாடுகளின் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ள உதவி தொலைபேசி எண்கள், இ மெயில், வாட்ஸ் அப் எண்கள் தரப்பட்டுள்ளன.
Must Read : நேட்டோ, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்: ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கான தொடக்கம் என்ன?
இது தவிர குறிப்பான கவலைகள், தகவல்கள் இருப்பின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தின் இ மெயில், தொலை பேசி எண்கள் தரப்பட்டுள்ளன.
இத்தகைய விவரங்கள் கடிதத்தில் உள்ளன
பெற்றோரிடம் இருந்து வரும் தகவல்கள் உரிய மட்டத்திற்கு என்னுடைய நாடாளுமன்ற அலுவலகத்தின் மூலமாகவும் கொண்டு செல்லப்படும். இந்திய குடிமக்கள் அனைவரும் ஊறு ஏதும் இல்லாமல் பாதுகாக்கப்படவும், பயணங்கள் அமையவும் தொடர்ந்து முயற்சிகளை நானும் அமைச்சக மட்டத்தில் தொடர்பு கொண்டு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.