புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தால் அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தான் பொறுப்பு என அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி தெரிவித்துள்ளது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதிக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா ஆதரவாளர் என்பதால் தான் அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படும் நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் வழங்காமல் ஆட்சியை கலைக்க தர்மயுத்தம் செய்வதர்களுக்கு சீட் வழங்கியுள்ளதாக ஓபிஎஸை சீண்டியுள்ளார்.
தனக்கு சீட் மறுக்கப்பட்டதற்கான காரணத்தை கூற முதலமைச்சர் பழனிசாமி மற்றும் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் மறுத்து வருவதாக கூறிய எம்.எல்.ஏ.ரத்தினசபாபதி தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர் தேர்வில் சர்வாதிகார போக்கு அரங்கேறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
19-ஆம் தேதிக்குள், தனக்கு சீட் வழங்கப்படாததற்கான காரணம் குறித்து கட்சித் தலைமை விளக்கமளிக்காவிட்டால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக ரத்தினசபாபதி கெடு விதித்திருக்கிறார்.