ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்று தொடங்கியது. இன்று அப்போலோ மருத்துவர்கள் குறுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கிய அறிவுரைகள் குறித்து அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார்.
ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ குழு வல்லுனர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரையின் படி 6 பேர் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக விசாரணையை அடுத்துகட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் சசிகலா தரப்பு மற்றும் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். முடிவில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேர் குறுக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்து.
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க ஜெயலலிதா மறுத்தார்
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் நாள் விசாரணையில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதில், 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்னை இருந்தது என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
Must Read : தொண்டர்களின் ஏக்கங்கள், முழக்கங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் - வி.கே. சசிகலா
மேலும், மருத்துவர் சிவக்குமார் அழைத்ததின் பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சென்று சந்தித்தேன் என்ற கூறிய, பாபு மனோகர் அவருக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்தேன் என்றார்.
Read More : எடப்பாடி பழனிசாமி பற்றி ஓ.ராஜா பேசிய ரகசியம் என்ன..? ரகசிய டீமை உருவாக்கிய சசிகலா
ஆனால், நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் என்றும் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.