பிரதமர் நரேந்திர
மோடியை சந்தித்த
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக பாமக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலன் குறித்து விசாரித்த பிரதமர், அவரின் உடல் நலனை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் நலனுக்காக காவிரி மற்றும் கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமரிடம் அன்புமணி ராமதாஸ் கோரினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் அன்புமணி ராமதாஸ் முன்வைத்தார். அவற்றை கனிவுடன் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது. பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாகவும், மன நிறைவளிக்கும் வகையிலும் இருந்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.