ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி கடைகளையும் ஒன்று சேர்த்து பிரியாணி திருவிழாவைக் கொண்டாட
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட அரங்குகள், 20க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஆம்பூர் வர்த்தக மையத்தில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, . 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய நாளில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பிரியாணி திருவிழா நடைபெற இருந்தது.
இந்நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆம்பூரில் நாளை அரசு சார்பில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி அனுமதிக்கப்படாவிட்டால் வளாகத்திற்கு முன்பு இலவசமாக பீப் பிரியாணி வழங்கப்படும் என விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட தலித் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் அறிவித்து இருந்தது.
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி மறுப்புக்கு பலர் எதிரப்பு தெரிவித்து வந்த நிலையில் கனமழை காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருப்பத்தூரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.