சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விடுப்பில் சென்றதால், அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக நிர்வாகிகளின் மனுக்கள் மீதான உத்தரவு வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவையும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
பொது செயலாளர் மூலமாக இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது..
இருவரின் வழக்குகளையும் நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்சநீதிமன்றமும்,டெல்லி உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கி நடத்தி வருவதால், இந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அதன் பொது செயலாளரான டிடிவி.தினகரன் தரப்பில் மனுத்தாகல் செய்யப்பட்டது. இதையடுத்து கட்சியில் பொது செயலாளர் உரிமை கோரும் சசிகலா வழக்கை மட்டும் நீதிமன்றம் விசாரித்த நிலையில், அவரது வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
Also read... கொள்ளையனை பொறிவைத்து பிடித்த மக்கள் - கண்டு கொள்ளாத போலீஸ்.. திருடனை விடிய விடிய காவல் காத்த ஊர்மக்கள்..
இந்த நிராகரிப்பு மனுக்களில் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி இன்று உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நீதிபதி ஸ்ரீதேவி இன்று விடுப்பில் சென்றதால் அவரிடம் பட்டியலிடப்பட்ட வழக்குகள் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதன்படி இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் மனுக்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.