அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்றுடன் நிறைவுபெறுகிறது. கடந்த 25 நாட்களில் அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி ஃபேரன்ஹீட் வெயில் பதிவானது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் காலம் கடந்த மே 4ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அக்னி நட்சத்திரத்தில் இன்னும் அதிகமாக வெயில் பதிவாகக் கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. கத்திரி வெயில் தொடங்கியதுமே தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. இது மக்களை சற்றே மகிழ்ச்சி அடைய செய்தது.
ஆசானி புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்தது. இதை தொடர்ந்து வறண்ட வானிலை நிலவத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், கடுமையான கத்திரி வெயில் இன்றுடன் விடை பெறுகிறது.
இதையும் படிங்க: தமிழக அரசின் ஊழல் பட்டியல்.. 2 அமைச்சர்கள் பதவி விலக வேண்டிவரும்: அண்ணாமலை பேட்டி
இந்த அக்னி நட்சத்திர காலத்தில் அதிகபட்சமாக கடந்த மே 6ம் தேதி வேலூரில் 105.98 டிகிரி ஃபேரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 30ம் தேதி இதைவிட அதிகமாக வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. அக்னி நட்சத்திரம் இன்று விடைபெறும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.