சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஓபிஎஸ் இருக்கை விவகாரம், ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றம் வருகை தந்தனர். பேரவை கூடியதும் சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் புருஷோத்தனம் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு கேள்வி நேரம் தொடங்கியது.
பழனி தொகுதி கொடைக்கானல் பகுதியில் ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க அரசு முன்வருமா என பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “மலைப் பகுதியில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் முறையாக கல்வி பெறும் வகையில முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும். என்றாலும் பழனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அரசு கலைக் கல்லூரிகள் இருப்பதால் கல்லூரிகள் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை” என்று குறிப்பிட்டார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 31 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அப்போது இடையே பேசிய சபாநாயகர் அப்பாவு, "31 கல்லூரிகள் தொடங்கி இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் எனது தொகுதியில் ஒரு கல்லூரி கூட தொடங்கவில்லை. நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன்", என்றார். இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அமைச்சர் பொன்முடி, "நீங்களும் நீண்ட நாட்களாக கேட்டு வருகிறீர்கள். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்து, உங்கள் தொகுதியிலும் கல்லூரி தொடங்க முதலமைச்சரிடம் அறிவுறுத்தப்படும்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Assembly