அ.தி.மு.க இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளனர்.
அ.தி.மு.க வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் போடி தொகுதியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி சண்முகம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி சண்முகநாதன், மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 171 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இதில், மொத்தமுள்ள 31 அமைச்சர்களில் வளர்மதி, நிலோபர் கபில், பாஸ்கரன் ஆகிய மூன்று அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த முறை சிவகாசி சட்டப்பேரவை தொகுதி லிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த முறை ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அவர்கள் போட்டியிட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது.