திருவண்ணாமலையில்
ஜெயலலிதாவின் பெயரில் இயங்கி வந்த அம்மா இல்லத்தை
அதிமுக பிரமுகர் ஜேசிபி எந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அ
திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை போரூர் சாலையில் அம்மா இல்லம் என்ற பெயரில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே ராஜனின் அதிமுக அலுவலகம் கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் இளைஞர்களுக்கான கணினி பயிற்சி கூடம், தையல் பயிற்சி கூடம், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு அருந்தும் வகையில் உணவு கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த இடத்தை அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கே ராஜன் வாடகைக்காக ஒப்பந்தம் செய்து இந்த இடத்தை அலுவலகம் நடத்தி வந்தார். இடத்தின் உரிமையாளர் இந்த இடத்தினை அதிமுக பிரமுகர் சஞ்சீவி ராமன் என்பவரிம் விற்பனை செய்துள்ளார்.
தற்போது பெருமாள் நகர் கே ராஜன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி நேற்று நள்ளிரவு அத்துமீறி அதிமுக பிரமுகரான சஞ்சீவி ராமன் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு அம்மா இல்லத்தை இடித்து தரை மட்டமாக்கினார்.
தகவல் அறிந்ததும் இன்று காலை அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜனின் ஆதரவாளர்கள் இடிக்கப்பட்ட அதிமுக அலுவலகம் முன்பு குவிந்து அங்கிருந்த ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் இடம் யாருடையது என்பது குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அத்துமீறி அலுவலகத்தை இடித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
இதையும் படிங்க:
தஞ்சாவூரில் நூதன முறையில் 7 கிலோ தங்க நகைகள் கொள்ளை என புகார்... போலீசார் தீவிர விசாரணை
காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரில் அங்கு குவிந்திருந்த அனைவரும் கலைந்து சென்றனர். அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதாவின் பெயரை தாங்கி இயங்கி வந்த அம்மா இல்லத்தை அதிமுக பிரமுகரே இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சதீஷ் - திருவண்ணாமலை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.