நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளை சேர்ந்த அரசு அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரி
அதிமுக சார்பில்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 80 ஆயிரம் காவல்துறையினர், 1.30 லட்சம் அரசுப் பணியாளர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தது.
தேர்தல் நடைபெறும் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதிலாக, தேர்தல் முடிந்து விட்ட ஊரக பகுதி அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவர், தனது மனுவில், தேர்தலில் பெரும்பாலும் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடுகளை தவிர்க்கவும், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த ஊரக பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அளித்த விண்ணப்ப மனுவை பரிசீலிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.