தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை தேடி வந்தது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும் அவரை பிடிக்க முடியவில்லை.
இதனிடையே ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்திருந்தது. ராஜேந்திர பாலாஜி வெவ்வேறு சிம்கார்டுகள் பயன்படுத்தி, வழக்கறிஞரை தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. மேலும், ராஜேந்திர பாலாஜி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களுக்கு தனிப்படை விரைவதற்கு முன்பாகவே அவருக்கு தகவல் கசிந்துவிடுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளநிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Rajendra balaji