அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 29ம் தேதி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி மூன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனுத்தாக்கல் செய்தது. அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுகவின் இருதரப்பும் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியின் உட்கட்சி தேர்தல்களை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், திருத்தப்பட்ட புதிய விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் தற்போது எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் ஆணையம் தலையிடுவதில்லை என்று குறிப்பிட்டு, இரட்டை இலை ஒதுக்கீடு பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார் என்று தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Election commission of India, Erode Bypoll, Erode East Constituency, OPS - EPS, Supreme court