பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தல் பணி செய்து வரும் நடிகர் ராதாரவி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து காந்திபுரம் 100 ஆடி ரோட்டில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய ராதாரவி தனிப்பட்ட வாழ்விலேயே தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்றாமல் கைவிட்டவர் எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என்று கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசினார்.
மேலும் ராதாரவி பேசியதாவது, “கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் அவர்கள் போட்டியிடுவதை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது எனது கடமைகளில் ஒன்று. இதே தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேர்மை அற்றவர். வானதி சீனிவாசனின் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘பி டீம்’ ஆக கமல்ஹாசன் செயல்படுகிறார்.
கம்யூனிஸ்டுகள் ரூ.27 கோடி பணம் பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் இருக்கின்றனர். காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சுயமாக சிந்தித்து பேச முடியாமல் பேப்பரில் எழுதி வைத்து அதைப் பார்த்து படிபவர்தான் மு.க.ஸ்டாலின்.வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடையும்.
69 ஆண்டு காலமாக திராவிடத்தை சுவாசித்துக் கொண்டு இருந்தவர்கள் தற்போது தேசியத்தை சுவாசிக்க வெளியே வந்துள்ளோம். இஸ்லாமிய சமூகத்தினரின் நண்பனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திமுக உண்மையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கையே கடைபிடித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சட்டங்கள் அவசியம் தேவை. அதன் மூலமாகத்தான் இந்தியாவில் இருக்கும் வேற்று நாட்டவரை கண்டறிய முடியும்.” இவ்வாறு நடிகர் ராதாரவி பேசினார்.