கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை வரவேற்று
மதுரையில் ஆபாச வார்த்தைகளுடன் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பத்தல பத்தல பாட்டில் மத்திய அரசை விமர்சித்து வரிகள் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ட்ரைலரில் கமல் ஆபாச வார்த்தையை பேசுவது போன்ற காட்சிகள் இருக்கலாம். இந்நிலையில், அதனை பயன்படுத்தி, "சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! பாத்துக்கலாம்..!" என்ற வசனம் அடங்கிய போஸ்டரை மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: இலவச பட்டா கேட்டு தீக்குளிக்க முயற்சி.. தடுக்க வந்த பெண் ஆய்வாளர் மீது பெட்ரோலை ஊற்றியதால் பரபரப்பு
அந்த போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது குறித்து மதுரை திடீர் நகர் மற்றும் தெற்கு வாசல் காவல்துறையினர் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் போலீசாரால் அகற்றப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.