நாடகம் மற்றும் கூத்துக் கலைஞர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உலகெங்கும் கொரோனாவின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற நிலையில், உலக நாடுகள் அனைத்தும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகின்றன. அதேபோல் இந்தியாவும் அதை கடைபிடிக்கின்றன.
இந்நிலையில் ஊரடங்கில் இருக்கும் தமிழக மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க தொடங்கி விட்டார்கள் என்பதை அரசு அறிந்ததே. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நிதி உதவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்தாலும் அது அவர்களுக்கு போதாத நிலையிலேயே உள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இல்லாத எத்தனையோ குடும்பங்கள் அரசு உதவிகளை பெறாமல் இருக்கின்றன. அதுமட்டுமல்ல 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புற கூத்துக் கலைஞர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எந்த உதவிகளும் பெறாமல் இருக்கின்றனர். சோற்றுக்கே வழி இல்லாத நிலைக்கு நாளுக்கு நாள் அவர்கள் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது என்பதை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே தமிழக முதல்வர் நாடகக் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கூத்துக் கலைஞர்கள் ஆகியோருக்கு உடனடியாக அரிசி உள்ளிட்ட அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்க வேண்டுமாய் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.