கூட்டுறவு வங்கி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திமுக வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
நகைக் கடன் தள்ளுபடிக்கு உரிய, தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து, அதன் விவரங்கள் தொகுக்கப்பட்டு கணினி மூலம் ஒரு மாதம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி, புள்ளி விவரங்கள் பகுப்பாய்வு செய்ததில் அதிமுக ஆட்சியின்போது நகைக் கடன்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நகைக்கடன் வாங்கியிருப்பது, முன்னதாக பயிர்க்கடன் பெற்றவர்கள், வெவ்வேறு வங்கிகளில் 5 சவரனுக்கும் மேல் நகைக்கடன் பெற்றவர்கள் உள்ளிட்டோர், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களுக்கான இறுதி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், பயனாளிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும் எனவும் கூறினார்.
Read More : ரேலா மருத்துவமனை டாக்டர்கள் இனி அரசு மருத்துமனையில் ஆபரேஷன் செய்வார்கள்.. ஏன்?
மேலும், ஜனவரி 31ம் தேதி 2021ஆம் ஆண்டு வரை உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறிய அவர், இதற்குப் பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களாக கணக்கெடுக்கப் பட்டிருப்பதாகவும், தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆய்வு செய்து அவர்களுக்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அமைச்சர் உறுதிபட கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.