வேளச்சேரியைச் சேர்ந்த லதா கோவிந்தசாமி என்ற பெண் 1995ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக 22 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து லதா பதவிக்கு தேவையான தகுதிகளை மேம்படுத்திக்கொள்ளாததால், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இவருக்கான பணி ஒதுக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2017 மே 2ஆம் தேதி மயக்கம் மற்றும் டிஹைட்ரேட் ஏற்பட்டதன் காரணமாக விடுப்பு எடுத்துள்ளார் லதா. மருத்துவ விடுப்பு குறித்த சான்றிதழ்களை சமர்ப்பித்தும், அவற்றை ஏற்காமல் லதாவை பணிநீக்கம் செய்து ஜூன் மாதம் டிசிஎஸ் மனிதவள மேம்பாட்டு பிரிவு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தன்னை மீண்டும் பணியில் அமர்த்தி உத்தரவிடகோரியும், பணியிலிருந்து நீக்கப்பட்ட காலத்திற்கு 18% வட்டியுடன் ஊதியத்தை வழங்க கோரியும் சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் லதா வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி என்.வேங்கடவரதன், லதா தாக்கல் செய்த ஆவண ஆதாரங்களை பார்க்கும்போது அவர் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, பணி நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து சம்பள பாக்கியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும் எனவும், லதாவை 3 மாதத்தில் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.