சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் , அமுதா தம்பதியின் மகள் மேகலா (வயது-22). பி.காம் படித்துள்ள மேகலா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது வேலைக்கு செல்லும் வழியில் சாலிகிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. யுவராஜ் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். மேகலா மற்றும் யுவராஜ இருவரும் நட்பாக பழகி வந்துள்ளார்.
காலப் போக்கில் நட்பு காதலாக மலர்ந்தது இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரின் காதல் விவகாரம் குறித்து மேகலாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.இதையடுத்து மேகாலாவிற்க்கு வேறு இடத்தில் திருமணம் செய்யலாம் என முடிவு செய்துள்ளனர்.இதனால் மேகலா அவரின் காதலர் யுவராஜிடம் இது குறித்து தெரிவித்து உடனே நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வடபழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகுதான் யுவராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று மேகலாவிற்கு தெரியவந்துள்ளது, இதனால் தினமும் இருவரின் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு யுவராஜ் அடித்ததாக கூறி மேகலா பழைய பெருங்களத்தூரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் நம்மை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என நினைத்து மேகலா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படுக்கை அறைக்குச் சென்ற மேகலா வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெருங்களத்தூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் எட்டு மாதத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.