தமிழகத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில், கொரோனா பாதித்த ஆண்டு முதல் தமிழகத்தில் 600 மொபைல் டவர்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கண்காணிப்பில் இல்லாத நிலையில், இந்த டவர்கள் திருடப்பட்டுள்ளதாக, மொபைல் போன் டவர்களை அமைத்த ஜிடிஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் (GTL Infrastructure Limited) கூறியுள்ளது.
மொபைல் போன் டவர்களை அமைப்பதில் ஈடுபட்ட ஜிடிஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டது. இதன் மண்டல அலுவலகம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 26,000 மொபைல் போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன் டவர்கள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 2018 ஆம் ஆண்டில், குறிப்பிட்ட தனியார் டவர் சேவை நிறுவனம் பெரும் நஷ்டம் காரணமாக தங்கள் சேவையை நிறுத்தியது. இதனால் நெட்வொர்க் சேவை நிறுவனங்களுக்காக இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட மொபைல் போன் டவர்கள் பயன்பாடற்றுவிட்டன. தமிழகத்தில் இந்த மொபைல் டவர்கள் செயல்படாத நிலையில், அதை கண்காணித்து வரும் நிறுவனங்களால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் டவர் தளத்தில் சென்று கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், மற்ற நெட்வொர்க் தேவைகளுக்காக செயல்படாத செல்போன் டவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றபோது, ஈரோடு மாவட்டத்தில் மொபைல் டவர் ஒன்று காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, டவர் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இயங்காத செல்போன் டவர்களின் நிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 600க்கும் மேற்பட்ட டவர்கள் காணாமல் போனது தெரியவந்தது. மர்ம கும்பல் குறிப்பாக கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆளில்லா மற்றும் கவனிப்பாரற்று இருக்கும் அவர்களது மொபைல் போன் டவர்களை திருடுவதாக பாதிக்கப்பட்ட நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதில், ஒரு டவர் மட்டும் இல்லை, இதுவரை 600 டவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
மேலும் இதுபோன்ற பல செல்போன் டவர்கள் அமைந்துள்ளதாகவும், இதுபோன்ற திருட்டு சம்பவங்களைத் தடுக்க காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக, செல்போன் டவர்கள் அமைக்க ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும் என்றும், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.
இதேபோன்று, தமிழகத்தில் மதுரை மாவட்டம் கூடல்புதூர் பகுதியில் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வோடபோன் செல்போன் டவர் இந்த ஆண்டு ஜனவரியில் காணாமல் போனது. கூடல்புதூர் அமராவதி தெரு பகுதியில், 28.82 லட்சம் ரூபாய் செலவில், டவர் ஒன்று அமைக்கப்பட்டது. சிக்னல் சரியாக கிடைப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து தொடர் புகார்கள் வந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளூர் டவரை சரிபார்க்க முடிவு செய்தபோது இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது. காணாமல் போன இந்த செல்போன் டவரும் பாதிக்கப்பட்ட ஜிடிஎல் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Mobile phone, Tamilnadu