புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பாக 333 பயனாளிகளுக்கு சுமார் 2.06 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், இன்றைக்கு அவர் உடல்நிலை மோசமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் கூறுவது வருத்தம் அளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். துரைக்கண்ணுவிற்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படுவதாகவும், அவரைக் காப்பாற்றும் இறுதிக்கட்ட முயற்சியில் மருத்துவக் குழுவினர் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Also read: ’தமிழ்நாடு நாளை’ அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டும் - முதல்வருக்கு சீமான் கோரிக்கை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகங்கள் எடுத்த தீவர நடவடிக்கைகளால், சிறப்பு மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன என்று கூறிய அவர், கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளோடு சேர்த்து பிற நோய் தொற்றுகளையும் தடுக்க அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 15 மடங்கு குறைவாக உள்ளது என்றார்.
அகில இந்திய தொகுப்பில் மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் பற்றி பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் சிறப்பான வாதத்தை எடுத்துவைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தும், சிறப்பான வாதத்தையும் எடுத்து வைத்தும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க அனுமதி கிடைக்கவில்லை. வரும் ஆண்டு முதல் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.