பதினோராம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய சோழர் காலகட்ட 9 சிலைகள் உட்பட ரூ.40 கோடி மதிப்பிலான 12 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து மீட்டுள்ளனர்.
ஒரு மீட்டர் உயரம் உள்ள பார்வதி சிலை, சுமார் ஒரு அடி உயரம் உள்ள சுழலும் கழுத்துடைய கிருஷ்ணர் சிலை, ஒன்றரை அடி உயரம் உள்ள நடராஜர் சிலை என 12 சிலைகளை மீட்டுள்ளனர்.ஆனால், அனைவரின் கவனத்தையும் ஒரே ஒரு சிலை மட்டுமே கவர்ந்து இழுத்தது. அது ராவணன்!
இதுவரை மீட்கப்பட்ட பல்வேறு சிலைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டு அனைவரின் கண்களையும் அகல விரிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியது தற்போது மீட்கப்பட்டிருக்கும் பத்துத்தலை ராவணனின் சிலை. இதுவரை பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து மீட்டுள்ளனர்.
ரூ. 500 கோடி மதிப்பிலான மரகத லிங்கத்தை கடந்த வாரத்தில் மீட்டுள்ளனர். மீதம் இருக்கும் சிலைகளையும் மீட்கும் பணியில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். ஆனால் முதன் முறையாக பத்து தலைகளைக் கொண்ட ராவணன் சிலையை தற்போதுதான் மீட்டுள்ளனர். இந்த சிலையை தொல்லியல் துறை நிபுணர்கள் அதிசிறப்பு மிக்க சிலை எனவும் குறிப்பிட்டுள்ளனர். காரணம், தொன்மை மட்டுமல்ல; அதன் வடிவமைப்பையும் சேர்த்து தான்!
இதையும் படிங்க: தமிழகத்தின் வளர்ச்சியை பிற மாநிலங்கள் அல்ல,பிற நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
அப்படி என்ன அந்த சிலைக்கு சிறப்பு எனக் கேட்கிறீர்களா? "தனது சிந்தையெல்லாம் சீதையை ஏற்றிவைத்த ராவணனின் தீராக்காதலை, 'பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பத்துத்தலை இராவணனின் பத்துத் தலைகளிலும் சீதை நிறைந்திருப்பது போல'" சிற்பமாக வடித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் ராவணனுக்கென்று கோவில் இல்லை. ஆனால் மத்தியபிரதேசம் மாநிலம் விதிஷா என்ற பகுதிக்கருகே உள்ள ஊரின் பெயர் "ராவணன்". அங்கு ராவணனுக்கென்று ஒரு கோவில் உள்ளது. அதேபோல ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதி, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் ராவணனுக்கென்று 5 கோவில்கள் உள்ளன என்கின்றனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்.
மேலும் படிக்க: பொங்கலுக்கு பின் தொடர்ச்சியாக முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை: மா.சுப்பிரமணியன்
தற்போது மீட்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புக்கொண்ட சுமார் ஒரு அடி(27 செ.மீ) உயர உலோக சிலையின் முன்பகுதியில் 10 தலை கொண்ட ராவணனின் உருவமும் பின்புறம், அதாவது பத்துத்தலைகளில் உள்ள மூளைப்பகுதியில் சீதை தூங்கிக் கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
"ஒற்றைதலையல்ல, பத்துத் தலைகளிலும் சீதை மட்டுமே நிறைந்திருக்கிறார்" என ராவணனே சொல்வதுபோலத் தோன்றும்.
குறிப்பாக இந்தச் சிலையை ஆராய்ச்சி செய்த தொல்லியல் துறை நிபுணர்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உயிரோட்டத்துடன் செய்யப்பட்ட இந்த சிலை வட இந்திய பகுதிகளிலுள்ள ராவணன் கோவில்களிலிருந்து கடத்தப்பட்டதா? அல்லது இலங்கையில் உள்ள ராவணன் கோவிலில் இருந்து கடத்தப்பட்டதா என்பது குறித்தும், அந்த சிலையின் சரியான வயது என்ன என்பது குறித்த ஆராய்ச்சியை கையிலெடுத்திருக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Idol smuggling, Idol Theft, The idols