திமுக அரசு பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஒரு ஆண்டில் திமுக அரசுக்கு ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது. மிக முக்கியமான வாக்குறுதிகளையும் பத்தாண்டு கால திட்டத்தையும் திருச்சியில் நடைபெற்ற திமுக பிரச்சார கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது வாக்காளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த மே மாதம் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களைக் கைப்பற்றியது, மே 7ஆம் தேதி முதல் அமைச்சர் மு,.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொள்ளும் என அறிவித்திருந்த நிலையில்,மே 4ஆம் தேதி சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் மற்றும் பேனர்களை கிழித்து உணவகத்தை அப்பகுதி திமுகவினர் சேதப்படுத்தினர், பதவியேற்புக்கு முன்பே ஏற்பட்ட இந்த நிகழ்வால் அப்பகுதி மக்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டு புதிய அரசிற்கு முதல் சர்ச்சையை ஏற்படுத்தியது, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.
மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்பட்ட கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன, ஆனால் அதிலும் முற்றிலுமாக தள்ளுபடி கிடைக்கவில்லை என்கிற சர்ச்சை எழுந்த நிலையில் 2020ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றவர்களுக்கும் 40 கிராமுக்கு மேலே நகை கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது என அரசு அறிவித்தது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, மேலும் 5 சவரனுக்கு குறைவாக வைத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு இன்னும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை அதற்கான சான்றிதழும் கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பரவலாக இன்று வரை இருந்து வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் தைத் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது இருபத்தியோரு பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார், இந்தப் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்று இருந்ததாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்தன, குறிப்பாக இந்த பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட வெள்ளம் உள்ளிட்ட சில பொருட்கள் தரமற்று இருந்ததாக பொதுமக்கள் பல இடங்களில் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார், இந்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு தரமுள்ள வகையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், எவ்வித புகாரும் இல்லாமல் அனைவருக்கும் கிடைப்பதை அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.
திமுக வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதியாக பார்க்கப்பட்டது தமிழ்நாட்டிலுள்ள மகளிருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்கிற அறிவிப்பு, திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைக்கப் பெற்ற வெற்றியில் இந்த அறிவிப்பு மிக முக்கிய பங்காற்றியது என்றால் அது மிகையல்ல, இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்த இந்த தேர்தல் வாக்குறுதி எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என கடந்த ஓராண்டில் தமிழ்நாடு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
பிரதமர் மோடியே எனது ஒரே தலைவர்.. காயத்ரி ரகுராம் ட்விட்!
எதிர்க் கட்சிகளும் கடந்த ஓராண்டில் இந்த தேர்தல் வாக்குறுதியை எப்போது அரசு நிறைவேற்றும் என பலமுறை கேள்வி எழுப்பியதும் கடந்த ஆண்டில் மிக முக்கியமான சர்ச்சையாக பார்க்கப்படுகிறது இறுதியாக இந்த ஆண்டில் பட்ஜெட் உரையில் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்த 1000 ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்காக குழு அமைக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு இறுதியாக வெளியிடப்பட்டது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடுமையான நிதி சுமையில் இருக்கும் நிலையில் இந்தத் திட்டம் யாருக்கெல்லாம் சென்றடையும், அனைத்து மகளிர்க்கும் கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகள் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன. ஏற்கெனவே பல இடங்களில் முதியோருக்கான ஓய்வு தொகை பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்கிற புகாரும் நிலுவையில் உள்ள நிலையில் மகளிர் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த திட்டத்தை அரசு எவ்வாறு சாத்தியப்படுத்தப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடம் அதிக அளவில் உள்ளது.
- அபினேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.