ஐபிஎல் வருமானத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் சம்பாதித்த வீரர்கள் பட்டியலில் தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் தற்போது சின்ன தல ரெய்னாவும் இணைந்தார்.
2020-ஐபிஎல் தொடரில் சர்ச்சையினால் விலகிய ரெய்னாவை சிஎஸ்கே நிர்வாகம் 2021 தொடருக்காக தக்கவைத்தது, இதனையடுத்து அவர் 100 கோடிக்கும் அதிக வருவாயை ஈட்டிய 4வது ஐபிஎல் வீரர் ஆனார்.
இன்சைடுஸ்போர்ட் மணிபால் என்ற ஊடகத்தில் வந்த செய்திகளின் படி 14வது ஐபிஎல் தொடருக்கு தக்கவைக்கப்பட்டதன் மூலம் ரூ.11 கோடி பெறும் ரெய்னாவின் சம்பாத்தியம் ஐபிஎல் மூலம் ரூ.100 கோடியைக் கடந்தது.
ரெய்னாவின் ஃபார்ம் என்னவென்பதைக் கணக்கில் கொள்ளாமல் அவரை தக்கவைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ரெய்னா 2008 முதல் சிஎஸ்கே அணிக்கு ஆடிவருகிறார். சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்ட அந்த 2 ஆண்டு காலம் ரெய்னா குஜராத் லயன்ஸ் அணிக்கு ஆடினார்.
2018-ல் மீண்டும் சிஎஸ்கே வந்த போது ரெய்னா மஞ்சள் ஆர்மியில் இணைந்தார். அந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். 15 போட்டிகளில் 445 ரன்களை எடுத்தார். சராசரி 37.38. 2019 தொடரில் ரெய்னா 17 போட்டிகளில் 383 ரன்களை எடுத்தார்.
இந்த முறை பெரிய தல தோனி கோப்பையை வெல்ல சின்ன தல ரெய்னா உதவுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்ரனர்.