ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நடராஜனுக்கு இந்த வருடம் சிறந்த வருடமாகவே அமைந்தது என்று சொல்லலாம்.
ஐ.பி.எல் 2020 தொடரில் சிறப்பான பந்துவீச்சை நடராஜன் வெளிபடுத்தியதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது. இதுவே அவருக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் அவருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
சேலத்தை சின்னம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் அணி இறுதி ஓவர்களில் நடராஜனையே நம்பி உள்ளது. இறுதி ஓவர்களில் நடராஜன் வீசும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் பலர் திணறி வருகின்றனர்.
நடராஜன் வீசும் யார்க்கரில் சிக்கி பலமுறை பேட்ஸ்மேன்களை நிலைகுலைந்து உள்ளனர். நடராஜன் நடப்பு ஐ.பி.எல் சீசினில் 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக உள்ள அவருக்கு நேற்று பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை சன்ரைசர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல் தொடருக்காக தற்போது துபாயில் இருக்கும் நடராஜன் இதனை முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கூடுதல் வீரர்கள் பட்டியலில் நடராஜன் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் கிடைத்தது, பெண் குழந்தை பிறந்தது என நடராஜன் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்