ஐ.பி.எல் 2022 தொடரின் 59-வது போட்டியில்
சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜூம், கான்வேவும் களமிறங்கினர். கான்வே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
உத்தப்பா ஒரு ரன்னிலும், ரூத்ராஜ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணி 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவரைத் தொடர்ந்து ராயுடு 10 ரன்களிலும், துபே 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 7 ஓவர்களில் 39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. ஐந்தாவதாக களமிறங்கிய தோனி மட்டும் நிதானமாக ஆட முயற்சி செய்தார். அவருக்கு மற்ற அணி வீரர்கள் பார்டனர்ஷிப் கொடுக்கவில்லை. வந்த அனைத்து வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். 16 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி மட்டும் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதனையடுத்து, 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர். இஷான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டேனியல் சாம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித்தும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா மட்டும் நிதானமாக ஆடினர்.
இறுதிவரை ஆட்டமிழக்காத அவர் 34 ரன்கள் எடுத்தார். 14.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி 3 வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் படுதோல்வியடைந்ததன் மூலம் சென்னை அணியின் கடைசி ப்ளேஆப் கனவும் கலைந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.