தோனி எதைச் செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு என்று அவரது செயலுக்கும், வார்த்தைக்கும் தனி பொருள்கோளியலைப் படைத்து விடுவார்கள் போலிருக்கிறது தோனி பக்தர்கள். இப்படித்தான் அவர் பேட்டைக் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இது என்னவா இருக்கும்? இதுக்கு அர்த்தம் ஏதாவது இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு கொண்டிருக்க லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அமித் மிஸ்ரா தனது ட்விட்டரில் கூறியது:
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி டெவன் கான்வே அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

தோனி மட்டையைக் கடிக்கும் வைரல் போட்டோ
இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங் ஆடும் போது அடுத்ததாக களமிறங்குவதற்கு தோனி தயாராக இருந்தார். டக் அவுட்டில் இருந்த அவர் தனது பேட்டை கடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலானது.
நேற்றைய போட்டியில் மட்டுமின்றி இதற்கு முன்பும் தோனி பல போட்டிகளில் இதை செய்திருக்கிறார். தோனி இவ்வாறு செய்வதற்கு காரணம் தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அமீத் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் மிஸ்ரா, "தோனி தனது பேட்டை அடிக்கடி கடிப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதற்கு காரணம் அவரின் பேட்டில் உள்ள டேப்கள், நூல்கள் ஏதேனும் வெளியே வந்திருந்தால் அதனை அவர் எடுப்பதற்காக அவ்வாறு செய்வார். அவருக்கு அவரது பேட் சுத்தமாக இருக்க வேண்டும். தோனி தன் பேட்டில் டேப்கள், நூல்கள் இருப்பதை விரும்ப மாட்டார், பேட் நீட்டாக இருக்க வேண்டும் அவருக்கு” என்று பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.