இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் செமராங் அணிக்கும், பெர்சிஸ் சோலோ அணிக்கும் இடையேயான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. டெர்பி போட்டிக்கான அரங்கத்தில் அமர்ந்து பார்க்கும் அளவிலான டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்பட்டன. மற்றவர்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது.
அக்டோபரில் மலாங்கில் நடந்த போட்டியில் 135 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பார்வையாளர்களைத் தடை செய்ய போலீஸார் வியாழக்கிழமை முடிவு செய்ததாக மாகாண ஆளுநர் கூறினார். விளையாட்டை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கால்பந்து ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக செமராங் அணி ஆதரவாளர்கள், ஆட்டத்தை காண மிகுந்த ஆர்வம் காட்டினர்.
ஒரு கட்டத்தில் மைதானத்திற்குள் நுழையவும் அவர்கள் முற்பட்டனர். இதனால், காவலர்கள் மற்றும் போராட்டகாரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது காவலர்கள் மீது ரசிகர்கள் கற்களை வீசத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கட்டுப்படுத்தினர் .
போராட்டம் வன்முறையாக மாறியதால், அப்பகுதியே போர்க் களம் போன்று காட்சி அளித்தது. கண்ணீர் புகை குண்டு வீசியதால், கால்பந்து போட்டியும் சிறிது நேரம் தடைபட்டது. மே மாதம் 23 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை நடத்த இந்தோனேசியா தயாராகி வரும் நேரத்தில் வெள்ளியன்று நடந்த சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பெர்சிஸ் சோலோ அணி, இந்தோனேசியாவின் கால்பந்து கூட்டமைப்பை வழிநடத்த வியாழன் அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கேபினட் அமைச்சரான எரிக் தோஹிர் என்பவருக்குச் சொந்தமானது. அதன் மற்றொரு உரிமையாளர், ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் இளைய மகன் கேசங் பங்கரேப் ஆவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.