ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்பதற்கு 2 வீரர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிக்கெட் வீரரும வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் டி20 க்கான இந்திய அணியின் கேப்டன்ஷிப் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்த நிலையில் அடுத்ததாக 2 ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது.
அதேநேரம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்கிறார். இவரது தலைமையில் இந்திய அணி இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா அடுத்த மாதம் விளையாடவுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான வருங்கால கேப்டன் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- டி20 ஃபார்மேட்டிற்கான கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார். அவர் இந்த பொறுப்பில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரை வரை நீடிப்பார் என்று நினைக்கிறேன். ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தளவில் உலகக்கோப்பை தொடரை வரையில் ரோஹித் சர்மா கேப்டனாக நீடிப்பார்.
நீண்டகால அடிப்படையில் ரோஹித் சர்மாவுக்கு பின்னர் சுப்மன் கில் அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரில் ஒருவர்தான் கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கேப்டன் குறித்து என்னுடைய தேர்வு யார் என்று கேட்டால் அது இவர்கள் இருவர்தான் என்று கூறுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket