உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விசாரணை நடத்தப்படும் என்று பிசிசிஐயின் நிர்வாகக்குழுத்தலைவர் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்து, தொடரை விட்டு வெளியேறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்துள்ளது ரசிகர்களை பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அரையிறுதி போட்டியில் தோனி களமிறங்கிய வரிசையும் கேள்விக்குள்ளானது.
வழக்கமாக 5-வது அல்லது 6-வது இடத்தில் களமிறங்கும் தோனியை ஏழாவது இறக்கியது ஏன்?, சமீப ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை அளித்த அம்பதி ராயுடு உலகக்கோப்பை தொடரில் ஏன் தேர்வு செய்யப்படவில்லை போன்ற கேள்விகள் எழுந்தது.
குறிப்பாக 4-வது இடத்தில் வீரர்கள் மாற்றி, மாற்றி களமிறக்கப்பட்டனர். ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் 4-வது இடத்தில் களமிறக்கப்பட்டு பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. ராயுடு 4-வது இடத்துக்கு சரியாக இருப்பார் என்று உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் கூறப்பட்ட நிலையில், அவர் அணிக்கு தேர்வு செய்யப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது. வருங்காலத்தில் சிறந்த அணியை எப்படி கட்டமைப்பது என்பது குறித்து கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் சிஒஏ ஆலோசனை நடத்தும் என அதன் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
‘‘பயிற்சியாளர் மற்றும் கேப்டன் விராட் கோலியுடன் அவர்கள் விடுமுறை முடிந்தவுடன் நாங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவோம். அதேபோல் வருங்காலத்தில் எப்படி செயல்படுவது என்னது குறித்து தேர்வுக்குழு தலைவருடனும் ஆலோசனை நடத்துவோம்’’ என்றும் அவர் கூறினார்.
விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியிடம் அரையிறுதியில் டோனியை 7-வது இடத்தில் களம் இறக்க காரணம் என்ன?, ஒன்றரை ஆண்டுகளாக நான்காவது இடத்திற்கு அம்பதி ராயுடுவை தயார் செய்துவிட்டு, உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்காதது ஏன்? போன்ற கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவில் முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய் (தலைவர்), டயானா எடுல்ஜி, ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் ரவி தோட்ஜே ஆகியோர் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.