புனே ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது, குருணால் பாண்டியா, ராகுலின் அற்புத பினிஷிங், ஷிகர் தவானின் அபாரமான 98 ரன்கள் என்று இந்திய அணி 317 ரன்களைக் குவிக்க, இங்கிலாந்து 135/0 என்ற நிலையிலிருந்து பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் 251 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
ஆட்ட நாயகன் விருது வென்றார் ஷிகர் தவான்.
இந்நிலையில் ராகுல், ஷிகர் தவானுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பளிக்கிறோம் என்றால் அவர்கள் சுயநலமற்ற வீரர்கள் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆட்டம் முடிந்து
விராட் கோலி கூறியதாவது:
சமீபத்தில் எங்களது வெற்றிகளில் இது மிகவும் இனிமையான வெற்றி. அனைத்து பவுலர்களும் தொடக்க அதிரடிக்குப் பிறகு மீண்டெழுந்தார்கள். பிரசித் கிருஷ்ணா அதுவும் தொடக்கத்தில் அடிவாங்கி விட்டு மீண்டெழுந்தது ஆச்சரியம்.
குருணால், புவனேஷ்வர், ஷர்துல் அனைவரும் அபாரம்.
நான் ஏற்கெனவே கூறியது போல் தீவிரமும் தங்கள் திறமையை நம்பும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பேன் என்று.
ஷிகர் தவானையும் சிறப்பாக குறிப்பிட வேண்டும்.
ராகுலும்தான் ரன்கள் வழிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
ஆகவே சுயநலம் பார்க்காமல் ஆடும் வீரர்களை எப்போதும் ஆதரிப்போம். ஒவ்வொருவர் இடத்துக்கும் எந்த ஒரு வீரரும் போட்டியிடும் ஆரோக்கியமான ஒரு சூழல் அணியில் இருக்கிறது. நாம் சரியான பாதையில்தான் பயணிக்கிறோம். மீண்டும் ஷிகர் தவானைக் குறிப்பிட விரும்புகிறேன், தான் சரியாகஆடாத போதும் கூட அவரது உடல் மொழி தன்னம்பிக்கையுடன் காணப்பட்டது.
அவர் மற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார். குடிநீர் கொண்டு செல்வார், இதைத்தான் சுயநலம் பாரா வீரர் என்கிறேன். அவரது பங்களிப்பு இன்று முக்கியமானது. கடினமான தொடக்க ஓவர்களை அவர் நின்று ஆடி சுதாரித்தார். ஸ்கோர்கார்டில் காட்டும் ஸ்கோரைக் காட்டிலும் அவரது ஸ்கோரின் பங்களிப்பு முக்கியம்.
அதனால்தான் நான் இறங்கிய போது 31-40 ஓவர்களில் நான் பவுலர்களை விளாசிக் கொள்கிறேன் என்று ஷிகர் தவானிடம் கூறினேன். ஆனால் விக்கெட்டுகளை இழந்து ஒரு குறுகிய பின்னடைவு ஏற்பட்டது. பிறகு குருணால் பாண்டியாவும் ராகுலும் ஆட்டத்தை அவர்களிடமிருந்து பறித்துச் சென்றனர்.
இங்கிலாந்து சில ஆச்சரியமான ஷாட்களை ஆடினார்கள் அபாரம். எல்லாம் அதிக ஸ்கோர் போட்டியாகவே இருக்கும், நாமும் அதிக ரன்களை எடுப்போம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.