ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை மைதானத்தில் இருந்த ஆஸி ரசிகர்கள் சிலர் இனவெறி ரீதியில் இழிவுபடுத்தியிருப்பது கடந்த சில தினங்களாகவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கொதிப்படையச் செய்திருக்கும் விவகாரமாக உருவெடுத்துள்ளது.
3வது டெஸ்ட் போட்டியின் 2 மற்றும் 3வது நாள் ஆட்டங்களின் போது ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த இவ்விரு வீரர்களையும் கேலரியில் இருந்த ரசிகர்கள் சிலர் அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை பேசியிருப்பது குறித்து இந்திய அணி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்றைய 4ம் நாள் ஆட்டத்தின் போதும் அதே போன்ற அவமதிப்பை இந்திய வீரர் முகமது சிராஜ் சந்திக்க நேர்ந்தது.
இதனையடுத்து சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்திய கள நடுவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் 6 பேரை வெளியேற்றினர். இதன் பின்னர் ஆட்டம் நடந்தது.
ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சக வீரர்களுக்கு நேர்ந்த அவமரியாதையை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இனவெறி தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. எல்லைக்கோட்டுக்கு அருகே இது போன்று பல ஏற்க முடியாத நிகழ்வுகளை சந்தித்திருக்கிறோம் ஆனால் இது ரவுடித்தனத்தின் உச்சமாக உள்ளது. மைதானத்தில் இது போன்று
நடப்பதை பார்ப்பது வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை உடனடியாகவும், தீவிரமாகவும் நடவடிக்கை எடுத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.