முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் டி-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர்: அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிய இந்திய அணி

மகளிர் டி-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர்: அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிய இந்திய அணி

  • Last Updated :

மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, தனது 2வது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணியில், ஷஃபாலி வர்மா 39 ரன்களும், ஜெமிமா 34 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

ஆனால், எஞ்சிய முன்னணி வீராங்கனைகள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது இந்தியா.

பின்னர், இலக்கை துரத்திய வங்கதேச அணி, இந்திய வீராங்கனைகளின் நேர்த்தியான பந்துவீச்சால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய தரப்பில் பூனம் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவுசெய்த இந்தியா, அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. இப்போட்டியில், 17 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 39 ரன்கள் விளாசிய ஷஃபாலி வர்மா ஆட்டநாயகியாக தேர்வானார். இந்திய அணி, தனது 3-வது லீக் ஆட்டத்தில் வருகின்ற 27ஆம் தேதி நியூசிலாந்துடன் மோதவுள்ளது.

Also see:

First published:

Tags: Cricket, Indian women cricket, Women Cricket