கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பந்த்தின் உடல் நிலை குறித்த அப்டேட்டை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கி என்ற இடத்திற்கு தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து சென்றார்.ரூர்க்கி அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. சாலையில் நடுப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் டிவைடரில் ரிஷப் பந்த் ஓட்டிவந்த மெர்சிடஸ் கார் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து, கார் கண்ணாடியை உடைத்து வெளியேற ரிஷப் பந்த் முயற்சித்துள்ளார்.
அப்போது அவருக்கு கை, கால், முதுகு, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசாரால் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், உயர் சிகிச்சைக்காக டேராடூனிற்கு ரிஷப் பந்த் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் காமி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ரிஷப் பந்த்திற்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ரிஷப்பின் உடல்நிலை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘கார் விபத்தில் காயமடைந்துள்ள ரிஷப் பந்த் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து குறித்து அவரது குடும்பத்தினரிடமும், மருத்துர்களிடமும் பேசினேன். ரிஷப்பின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரிஷப்பின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக ரிஷப் பந்திற்கு சிகிச்சை அளிக்கும் மேக்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆசிஷ் யாக்னிக், ரிஷப்பிற்கு லேசான காயங்கள்தான் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது இடுப்பு பகுதியில் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் அபாய கட்டத்தை ரிஷப் பந்த் தாண்டி விட்டதாகவும் தெரிவித்தார். இதனால் ரிஷப்பின் ரசிகர்களும் நலன் விரும்பிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
கார் விபத்தில் சிக்கி படுகாயம்… கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் நிலைமை என்ன?
வங்கதேச தொடரில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த்திற்கு இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால், அதற்கு தயாராக ரிஷப் பந்த்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rishabh pant