விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த்தின் உடல் நிலை குறித்து அவரது தாயார் சரோஜ் பந்த்திடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ தனது ட்விட்டர் பதிவில், ‘மரியாதைக்குரிய பிரதமர் மோடி ரிஷப் பந்தின் தாயார் மற்றும் குடும்பத்தினரிடம் ரிஷபுடைய உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பிரதமர் அக்கறையுடன் நலன் விசாரித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ அளித்துள்ள தகவல்படி ரிஷப் பந்த்தின் முன் நெற்றியில் 2 இடங்களிலும், வலது கால் மூட்டு, வலது கை மூட்டு, பாதம் ஆகிய இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து புறப்பட்ட ரிஷப் உத்தராகண்டின் ரூர்க்கிக்கு சென்றுள்ளார். அவரது கார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ரூர்க்கியின் நார்சன் எல்லையில் ஹம்மத்பூர் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த கார், சாலையின் நடுப்பக்கம் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி பற்றி எரிந்துள்ளது. இதில் ரிஷப்பின் முதுகு, கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் இருந்து கிளம்பிய ரிஷப், தனது தாயார் சரோஜ் பந்த்திற்கு, புத்தாண்டு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டில் சொல்லாமலேயே சென்றுள்ளார். இதனால் விபத்து ஏற்பட்ட பின்னர்தான், ரிஷப் தங்களை பார்க்க வந்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரிந்துள்ளது.
விபத்தை தொடர்ந்து ரிஷப் பந்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்காக டேராடூன் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அபாய கட்டத்தில் இருந்து ரிஷப் மீண்டு விட்டதாக கூறியுள்ளனர்.
இதேபோன்று, ரிஷப் பந்த் உடல்நிலை முன்னேற்றத்தை பிசிசிஐ கண்காணித்து வருகிறது. இதுபற்றி அதன் செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘கார் விபத்தில் காயமடைந்துள்ள ரிஷப் பந்த் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து குறித்து அவரது குடும்பத்தினரிடமும், மருத்துர்களிடமும் பேசினேன்.
ரிஷப்பின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரிஷப்பின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்’ என்று கூறியுள்ளார்.
விபத்தில் ரிஷப் பந்த் காயமடைந்து மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் பிரார்த்தித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Modi, Rishabh pant